புதுச்சேரியில் நாராயணசாமி அரசு கவிழ்ந்த நிலையில், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியில் இருந்தது. நமச்சிவாயம் உள்ளிட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினர் என 6 பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் ராஜினாமாவால், நாராயணசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்தது.
இதன் பின்னர், அதிமுக அல்லது என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. இதையடுத்து, புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று, ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பரிந்துரை செய்திருந்தார்.
இந்த நிலையில், விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.